சினிமா

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கமல் வாழ்த்து

webteam

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, கமல்ஹாசன், ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகள் பெற வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” எனத் தெரிவித்துள்ளார்.