சினிமா

கறுப்புப் பணம் வாங்கியதில்லை: கமல்ஹாசன்

webteam

இந்தியா டுடே மாநாட்டில் பேசிய கமல்ஹாசன், தான் ஒரு போதும் கறுப்புப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா டுடே மாநாட்டில், கலைத்துறை நடிகர் சார்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மாநாட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பாலிவுட் திரைப்பட உலகைவிட்டு வெளியே வந்தது ஏன் என்றும் கறுப்புப்பணம் பற்றியும் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் ஒருபோதும் கறுப்புப் பண பரி‌மாற்றத்தில் ஈடுபட்டதில்லை என்றும் அப்போது முதல் இப்போது வரை அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பழம்பெரும் கேமிராமேன் வின்சென்ட்டும் கடைசி வரையில் கருப்புப்பணம் பெற்றதில்லை என்றும் கமலஹாசன் கூறினார். மும்பை திரைப்பட உலகை நிழல் உலக தாதாக்கள் ஆதிக்கம் செய்வது பிடிக்கவில்லை என்றும் கறுப்புப் பணநடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் அதன் காரணத்தால் தான் பாலிவுட் திரைப்பட உலகைவிட்டு வெளியே வந்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.