நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் மூலம் தமிழக அரசு குறித்து அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்துவருகிறார். கமல்ஹாசனின் இந்த ட்விட்டர் செய்திகளை பல்லாயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
கமலின் இந்த ட்வீட்களுக்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி, கமலின் ட்விட்டர் பதிவுகளுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கமல் தனது ட்வீட்டில், “ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சியும் முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாது ஏன்?” என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, “பெரும்பாலும் தினந்தோறும் தமிழக எதிர்க்கட்சி, தமிழக அரசை பதவி விலக வலியுறுத்தி வருகிறது. எம்.எல்.ஏக்களுக்கு பணவிநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்தது. அதேபோல் குட்கா ஊழலிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கமலுக்கு தெரியுமா? தெரியாதா? அவரது மனதில் என்ன தான் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் தனது அடுத்த ட்வீட்டில், “எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்குத் துணிச்சல் உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை என்றால் வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் ட்வீட் போட்டுள்ள கஸ்தூரி, “புதிய எதிர்காலத்திற்காக சேர்ந்து உழைக்க தமிழக இளைஞர்கள் தயாராகவும், காத்துக்கொண்டும் இருக்கின்றனர். கமல் சார் உங்கள் மனதில் என்னதான் உள்ளது?” எனக் கேட்டுள்ளார்.
கமல் தனது மூன்றாவது ட்வீட்டில், “ஊழலில் இருந்து நாம் சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்க துணிவுள்ளவர்கள் வாருங்கள்.. வெல்வோம்” என தெரிவித்து இருந்தார். இதற்கு கமல் பாணியில் பதிலளித்துள்ள கஸ்தூரி, “குரல்கொடுத்தால் கைகொடுக்கக் காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு. ஓடிவருவர் கட்டளைக்கு கரைப்புரண்டே...” எனத் தெரிவித்துள்ளார்.