சினிமா

பணமதிப்பு இழப்பை ஆதரித்தது தவறு: மன்னிப்பு கேட்டார் கமல்

webteam

 மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தது தவறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஒரு பெரிய மன்னிப்பு என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் அவசர கதியில் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்துவிட்டதாக வருந்தியுள்ளார். தவறு செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்க தான் அஞ்சுபவன் அல்ல என்றும் கமல் எழுதியுள்ளார். பிரதமர் மோடி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அதற்கு பாராட்டு தெரிவிக்கவும் தயங்கமாட்டேன் என்றும் கமல் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

மேலும், பணமதிப்பு நீக்கம் பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்த போது ,கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டபட வேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்கு தருவது மட்டுமல்ல; அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால் என் சகாக்கள் பலரும் பொருளாதார கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு என் ஆதரவுக்கு எதிராக தங்களின் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்கள். 
கொஞ்ச நாள் கழித்து டிமானிட்டைசேஷனை நடைமுறை டுத்திய விதம் பிழையானது; ஆனால் யோசனை நல்ல யோசனைதான் என்று மனதை தேறிக் கொண்டேன். அதற்கு பிற்பாடும் பொருளாதார வல்லுனர்களின் விமர்சனக் குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்து கொண்டேன். 
தற்போது அந்த யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்தக் குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில் வரும் போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்கு பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.