சினிமா

”தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - கடம்பூர் ராஜூ

sharpana

”தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை வரி சலுகை அளிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவு அறிவிப்பார்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

”தமிழகத்தில் தியேட்டர்களுக்கு கேளிக்கை வரியில் சலுகை அறிவிப்பது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின்  கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் ஆலோசனை செய்து சலுகை அளிப்பது தொடர்பாக நல்ல முடிவினை அறிவிப்பார். அதிகமான காட்சிகளுக்கு மட்டும்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தியேட்டர்களில் கட்டணம் உயர்வு தொடர்பாக ஏற்கெனவே 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தக்கல் முறையில் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தக்கல் முறையில் டிக்கெட் கட்டணம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

மேலும் பேசிய அவர் , “அரசியலுக்கு வந்ததற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக நல்லாட்சி தந்த காரணத்தினால் 7  முறை மக்கள்  வெற்றி பெறச் செய்துள்ளனர். கமல்ஹாசன் வானத்தில் இருந்து குதித்தவர் போன்றும், புதியதாக கண்டுபிடித்தவர் போன்றும் பேசி வருகிறார். அதிமுகவிற்கு ஆட்சி புரிய வாய்ப்பு தந்த மக்களை  கமல்ஹாசன் பழிக்கிறாரா ?  கமல்ஹாசனை மக்கள் யார் கட்சி தொடங்க அழைத்தார்கள் ? கட்சி ஆரம்பித்ததற்காக சாக்கு போக்கு சொல்கிறார். அவரைவிட கட்சி ஆரம்பித்த ஜாம்பவான்களை காணவில்லை. அவருக்கு வரும் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்” என்றார்.