சினிமா

தொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட பூஜை

webteam

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

‘வாலி’ படத்தில் பாடல் ஒன்றுக்கு மட்டும் வந்து செல்லும் ஜோதிகா முதன்முதலில் திரையில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். 

இதனிடையே நடிகர் சூர்யாவின் மீது காதல் வயப்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், சில ஆண்டுகள் திரையை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகா மீண்டும் 2015 ஆம் ஆண்டு “36 வயதினிலே” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

அதைத்தொடர்ந்து அவர் நடித்த 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அந்த வரிசையில் இந்த வாரம் அவர் நடித்த 'காற்றின் மொழி'. படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், ஜோதிகாவை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் S.ராஜ் என்பவர் இயக்குகிறார். இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கின்றனர். அதேபோன்று செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'நந்த கோபால குமாரன்’(என்.ஜி.கே) படத்தையும் தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.