சினிமா

‘ஜெ.ஆர் 30’ படப்பூஜை - ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

சங்கீதா

ஜெயம் ரவியின் 30-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மன் என்னும் முதலாம் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதலாம் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘அகிலன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி அடுத்ததாக ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட நகைச்சுவை படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இயக்கத்தில் இணையவுள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘ஜெ.ஆர் 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ மற்றும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அக்கா - தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா இந்தப் படத்தை தயாரிக்கிறது. வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் துவங்கவுள்ளது.