சினிமா

‘விஜய் சேதுபதி, அனிருத் முதல் அட்லி குழந்தை வரை’ - ஷாருக்கானின் சுவாரஸ்ய பதில்கள்!

சங்கீதா

‘ஜவான்’ படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் சுவாரஸ்யப் பதிலளித்துள்ளார்.

தமிழில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அதன்பிறகு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்பட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்குமே பாலிவுட்டில் இது அறிமுகப்படம் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில், ஷாருக்கானின் ‘பதான்’ படம் தாறுமாறான ஹிட் அடித்துள்ள நிலையில், ‘ஜவான்’ படம் குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஷாருக்கான்.

அதில் அனிருத் பற்றி கூறும்போதும், ‘அனி.. மிகவும் புத்திசாலித்தனமானவர்... அதிக ஆற்றலுடனும், வேடிக்கையாகவும் வேலை செய்கிறார். இவ்வளவு இளம் வயதில், அவருடைய இளைஞர்கள் குழு முழுவதும் மிகவும் அருமையாக வேலை செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

இதேபோல் நடிகை நயன்தாரா பற்றி குறிப்பிடும்போது, “மிகவும் இனிமையானவர். அனைத்து மொழிகளிலும் நன்றாக பேசுகிறார்...அவருடன் நடிப்பது அருமையான அனுபவம். படத்தில் நீங்கள் அனைவரும் அவரை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி பற்றி குறிப்பிடும்போது, அவருடன் நடிப்பது வெறித்தனமாக இருக்கிறது என்றும், சமீபத்தில் அட்லீ மற்றும் பிரியா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தையை சென்று நேரில் பார்த்தீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, மிகவும் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார்.