சினிமா

அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் கேமியோ ரோலில் அல்லு அர்ஜூன்?

சங்கீதா

இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அறிமுகப் படத்தை இயக்கி வரும் இயக்குநர் அட்லீயின் ‘ஜவான்’ படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஷங்கரிடம் 'எந்திரன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லீ. அதன்பின்னர், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்புக் கிடைக்க, இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றிப் படங்களைத் தந்ததையடுத்து, இயக்குநர் அட்லீ, தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரானார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் அட்லீ கூட்டணிச் சேர்ந்துப் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று, படப்பிடிப்புத் துவங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் தாமதமாகிக் கொண்டு வந்தது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்குமே பாலிவுட்டில் அறிமுகப்படம் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்தப் படத்தில் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கன் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 25 டைட்டில்கள் ஆலோசனைச் செய்து, பின்னர் ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்தப் படம் வரும் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அல்லு அர்ஜூனை சந்தித்து இயக்குநர் அட்லீ பேசியுள்ளதாகவும், எனினும் அதற்கு இதுவரை அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நடிகர் அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அதிவேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.