சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், சிறுவயதிலிருந்தே கதை எழுதும் பழக்கம், கனடாவில் படித்த திரைப்பட கல்வி தான் தன் உண்மையான ஆர்வத்தை புரிய வைத்தது என்கிறார். வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் நடனமாடியபோது கூட்டத்தை கண்டு பயந்து ஓடி அப்பாவை கட்டிப்பிடித்த அனுபவத்தையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா'. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தன்னுடைய இயக்குநர் அவதாரம் குறித்து பேசிய அவர், "எனக்கு சிறுவயதில் இருந்து கதை சொல்லும் பழக்கம் அதிகாமக இருந்தது. தோன்றுவதை எல்லாம் எழுதுவார்கள் என்று சொல்வாங்களே அப்படிதான் நானும். எனக்கு வரக்கூடிய யோசனைகள் அனைத்தையும் எழுத ஆரம்பித்தேன். பின்பு தான் எனக்கு எழுத்தில் ஆர்வம் உள்ளது என புரிந்து, கனடாவில் திரைப்பட துறை பற்றிய படிப்பை படிக்க சென்றேன். அதுதான் எனக்குள் என்ன ஆர்வம் உள்ளது என புரிந்து கொள்ள உதவியது” என்று பேசியுள்ளார்.
மேலும் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் அப்பா விஜயுடன் சேர்ந்து நடனமாடிய நிகழ்வை பகிர்ந்துகொண்ட ஜேசன் சஞ்சய், “எப்படி அந்த பாட்டுக்குள்ள வந்தன்னு எனக்கு இப்போ நியாபகம் இல்ல, அப்போ எனக்கு 8-9 வயது தான் இருக்கும். என்னை கேட்டதும் ஜாலியா வாங்கப்பா சூட்டிங் போலாம்னு கிளம்பிட்டன். அங்க பாட்டுக்காக நானும் அப்பாவும் ஒரே மாதிரியான ட்ரெஸ் போட்டுட்டு ரெடி ஆகிட்டு இருந்தோம். அப்போ சோபி மாஸ்டர் தான் இருந்தாரு, பாட்டுக்கு ஷூட்டிங்லாம் கூட்டிட்டு போயிட்டாங்க, அங்க சுத்தி அவ்ளோ பேரை பார்த்து பயந்துட்டு ஓடிவந்து அப்பாவ கட்டிப்பிடிச்சிகிட்டன். அப்புறம் அப்பா, மாஸ்டர் எல்லாம் பேசி தான் பண்ண வச்சாங்க. அப்போ எனக்கு தெரியாது அப்பா கூட இப்படி ஒரு விசயத்த பண்ணபோறோம்னு. இப்போ பார்க்கும்போது அது பெரிய விசயமா இருக்கு” என பேசியுள்ளார்.