சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குநகர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதே தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2.0 தயாரிப்பு நிறுவனமான லைகாவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2.0 உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 3டி முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தப் படம், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் VFX காட்சிகள் முடிக்க தாமதம் ஆவதால் படத்தின் ரிலீஸ் ஒரு ஆண்டுக்கு மேலாக தாமதம் ஆனது. இந்நிலையில் இப்படத்தின் VFX பணிகள் முடிவடைந்துவிட்டதாக படக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமான பொருட் செலவில் 2.0 தயாரிக்கப்பட்டிருப்பதாலும், 3டியில் உருவாக்கப்பட்டிருப்பதாலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.