நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு வழக்கில் தலையிட்டதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ஐசரி கணேஷ் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் 22-ல் விசாரித்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென பொதுச் செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேசும், அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகினர். இதுதொடர்பாக இருவர் மீதும் தானாக வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஜூன் 22-ல் உத்தரவிடப்பட்டது. ஆனால் இருவரும் விளக்கம் அளிக்க அவகாசம் கோரிய நிலையில் வழக்கு இன்றைய தினத்திற்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஐசரி கணேஷ் தரப்பில், இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், தன் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனந்தராமன் தரப்பில், ஐசரி கணேஷின் அனுமதிபெறாமல் அவரது பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை ஏற்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
அப்போது ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நன்கொடையாளர் என்ற முறையில் சட்டப்பணிகள் ஆணையத்திற்கு உதவும்படி ஐசரி கணேஷிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். அதை ஏற்ற ஐசரி கணேஷ், 10 லட்ச ரூபாய் தருவதாகவும் அதை ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கைகள் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும்படியும் தெரிவித்தார்.