சினிமா

”வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வனை எடுத்துள்ளார்கள்”- நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்

webteam

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டி, வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்துக் கூறியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களிள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.