சினிமா

விஷாலின் ’சக்ரா’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை - சென்னை உயர் நீதிமன்றம்

Sinekadhara

நடிகர் விஷால் நடித்த ’சக்ரா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சக்ரா’ திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குநர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்து, அந்த படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னிடம் ‘சக்ரா' படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் இந்த படத்தை உருவாக்கி இருப்பது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் ’சக்ரா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையேற்ற நீதிபதி கார்த்திகேயன், ’சக்ரா’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு குறித்து நடிகர் விஷால், படத்தின் இயக்குனர் உள்ளிட்டோர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.