சினிமா

இந்தியன் - 2 வழக்கு: மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு

Sinekadhara

இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக சென்னையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, லைகா நிறுவனம் ஹைதராபாத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக இயக்குநர் சங்கர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தியன் 2 ஐ முடித்து கொடுக்காமல் வேறுபடத்தை சங்கர் இயக்க தடை விதிக்க கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இயக்குநர் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவிட முடியாது என தனிநீதிபதி தெரிவித்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் லைகா மேல்முறையீடு செய்தது. இன்றைய விசாரணையின்போது சென்னையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அதே கோரிக்கையுடன் ஹைதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக இயக்குநர் சங்கர் தரப்பில் புகார் கூறப்பட்டது. அதையடுத்து தனி நீதிபதி முன்னுள்ள மனுவுக்கு தீர்வு கண்டபிறகு மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என கூறிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.