இளையராஜா
இளையராஜா முகநூல்
சினிமா

“காப்புரிமை விவகாரத்தில் என் உரிமைதான் மேலானது என்ற வகையிலேயே கருத்து தெரிவிக்கப்பட்டது” - இளையராஜா

PT WEB

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4,500 பாடல்களை காப்புரிமை முடிந்த பிறகும் இசை நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இசையமைப்பாளர் இளையராஜா

இந்த வழக்கை 2019-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, “தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கின்றது” என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

தொடர்ந்து “படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருக்கிறது. அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருக்கிறது” என எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், “காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்க கூடியவர்” என தெரிவித்தார்.