சினிமா

பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று செல்கிறார் இளையராஜா!

webteam

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இன்று செல்கிறார்.

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கோரியும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக நடைபெற்றது.

அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் “எங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க தயார்” என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்தை உரிமைகோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒரு நாள் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரத்தை பொருத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் அதாவது அந்த 7 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் அவர் தியானம் மேற்கொள்வது குறித்தும் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் அனைத்தையும் கவனிக்க வழக்கறிஞர் ஆணையராக லட்சுமிநாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்நிலையில், ஸ்டூடியோவில் தியானம் செய்துவிட்டு தனது பொருட்களை இன்று எடுத்து வர உள்ளார் இளையராஜா. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.