சினிமா

காதலருடன் திருமணம் நடந்ததா, இல்லையா? இலியானா மவுனம்!

webteam

காதலருடன் திருமணம் நடந்ததா இல்லையா என்பது பற்றி சொல்ல விரும்பவில்லை என்று நடிகை இலியானா கூறினார்.

தமிழில் ’கேடி’ படத்தில் அறிமுகமானவர் இலியானா. பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஷங்கர் இயக்கிய ’நண்பன்’ படத்தில் நடித்தார். இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட இலியானா, இதை எடுத்தது தனது கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இலியானாவிடம் இதுபற்றி கேட்டபோது, ‘எனது கடந்த காலத்தை பற்றி பேசுவதை  விரும்பவில்லை. அதோடு எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும் பேசமாட்டேன். இதை நான் பலமுறைச் சொல்லிவிட்டேன். இதை நான் மறைக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. எல்லாம் வெளியே தெரிந்துவிட்டது. இதற்கு மேல் இதுபற்றி அதிகமாகக் கேட்காதீர்கள். நான் நடிக்கும் படங்களை ஆண்ட்ரூ பார்த்திருக்கிறார். அதுபற்றி கருத்துச் சொல்லி இருக்கிறார். நான் சிறந்த நடிகை என்று பாராட்டியிருக்கிறார். அவர் பாலிவுட்டில் பணியாற்றுவாரா? என்று கேட்கிறார்கள்.

அது பற்றி தெரியாது. ஆனால், அவர் சிறந்த புகைப்பட கலைஞர். நான் கலந்துகொண்ட ஒரு ஷோவில், சல்மான் கான், ரன்வீர் சிங் ஆகியோரை புகைப்படம் எடுத்துள்ளார். வருண் தவானையும் ஆலியா பட்டையும் விமானத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் படங்கள் சிறப்பானவை. ஆனால், சினிமாவுக்கு வருவாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது’ என்றார்.