சினிமா

“ஜெயலலிதாவாக நடிக்க விரும்பினேன்” - நடிகை நமீதா

webteam

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நடிகை நமீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் ''மன வேதனையின் உச்சத்தில் இருக்கும் நாள் இன்று. இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் அம்மா அவர்கள். அவர்களை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்ற நாளை என் வாழ்நாளின் பொன்னான நாளாக கருதுகிறேன். திருச்சியில் அம்மாவின் விசுவாசிகளான மக்களின் ஆரவாரத்திற்கிடையேயும், அம்மாவின் மெல்லிய சிரிப்பிற்கிடையேயும் அரசியல் கண்ட கொடுப்பினை என்றும் என் கண்முன் நிழலாடும். 

அம்மா கடந்துபோன பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரின் உண்மையான ஒரு தொண்டராகவே   இருந்து வருகிறேன். எந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும் நானும் உணர்ந்துகொண்டேயிருக்கிறோம்.  அவர் விட்டுப் போன கனவுகளை நிறைவேற்றுவதே அவரை பின் தொடரும் தொண்டர்களின் கடமையாக நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் '' அம்மாவின் வாழ்க்கை வரலாறுப் படமாக எடுக்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரின் முகமாக நான் நடிக்க பேராசைப்பட்டேன். இந்த எண்ணம் எனக்கு அவர் மறைவுக்கு முன்பிருந்தே உண்டு.ஆனால் என் சக நடிகையான நித்யா மேனன் அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக கேள்விப்பட்டேன். ''டியர் நித்யா. உண்மையில் அது பெரும் பாக்கியம். அம்மாவை உள் வாங்கிக் கொள்ள எல்லாவிதமான ஆசியையும் கடவுள் உங்களுக்கு வழங்கட்டும். அம்மாவாக படத்தில் வாழுங்கள். அம்மாவின் இழப்பு, பேரிழப்பு. அதை ஈடு செய்யவே முடியாது. அவரின் கோடானக் கோடி தொண்டர்களுக்கு எனது ஆறுதல்கள். அம்மா நம்மிடையே இருக்கிறார். வாழ்கிறார். வழிநடத்துகிறார் என நம்புங்கள். அவர் தன்னை நம்பிய யாரையும் கைவிட்டதில்லை. கைவிடமாட்டார்.  கண்ணீர் நிறைந்த மனதுடன் அம்மாவின் நினைவு நாள் அஞ்சலிகள்'' எனத் தெரிவித்துள்ளார்