சினிமா

’சுமார் 30 வாய்ப்புகள், இவர்களால்தான் போச்சு’: மல்லிகா ஷெராவத் வருத்தம்!

webteam

தன் தோழிகளை ஹீரோக்கள் பரிந்துரைப்பதால், தான் நடிக்க வேண்டிய சுமார் 20-30 பட வாய்ப்புகள் பறி போனதாக நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ படத்தில் நடித்திருந்தார். சிம்புவின் ’ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.  ஜாக்கிசானுடன் ’தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்திருந்தார். 

கடந்த சில வருடங்களாக அதிக படங்களில் நடிக்காமல் இருக்கும் அவர் கூறும்போது, ‘’நான் நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால், என்னை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் பெண்ணியம் பேசுகிறேன். அதனால் அதிகமாக பேசுவாள் என்றே என்னை நிராகரிக்கின்றனர். எனக்குப் பதிலாக அந்த ஹீரோக்கள் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக குறைந்தபட்சம் 20-ல் இருந்து 30 பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். இது எனக்கு கசப்பை ஏற்படுத்தவில்லை. இதுதான் எனது வளர்ச்சி. 

நான் பெண்கள் பிரச்னையை பற்றி பேசியபோது, பாலிவுட்டிலும் ஊடகங்களிலும் நாட்டுப்பற்றில்லாதவள் என்று என்னை விமர்சித்தார்கள். நான் சொல்வதை கேட்கவும் தயாராக இல்லை. என்னைத் தாக்கிய நடிகைகள் பற்றியும் தெரியும். ஆனால், நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தன மனப்பான்மை மாற வேண்டும் என நினைக்கி றேன்’’ என்றார்.