சினிமா

நான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்!

webteam

நடிகர் திலீப்பால்தான் நான் நடிகையானேன் என்று முன்னாள் ஹீரோயின் நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். 

திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய நவ்யா, இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். டி.வி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டியில், ‘’நடிகர் திலீப் இல்லை என்றால் நான் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, ‘’எனது முதல் மலையாள படம் ’இஷ்டம்’. 2001-ல் வெளியானது. இந்தப் படத்தின் இயக்குனர் சிபி மலயில், எனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு அழைத்தார். திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் அது நடந்தது. எனது மோனோ ஆக்டிங்கை வீடியோவாக பதிவு செய்தனர்.

பின்னர் அதை அந்தப் படத்தின் ஹீரோ திலீப்பிடம் காண்பித்தனர். என் நடிப்பு பிடித்ததால், அவரும் மஞ்சு வாரியரும் என்னை அந்தப் படத்தில் நடிக்கத் தேர்வு செய்தனர். அவர் அப்போது நிராகரித்திருந்தால் என் சினிமா வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கும். அதனால் அவரை இப்போதும் மதிக்கிறேன்.

அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு முன் போட்டோ ஷூட் எடுத்தோம். அப்போது திலீப், என் தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். அவர் கையை என் மீது வைத்ததுமே எனக்கு படப்படப்பு அதிகமாகிவிட்டது. இதயத் துடிப்பும் அதிகமானது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு பெண் மீது, தெரியாத ஆண் ஒருவர் கை வைத்ததால் வந்த படப்படப்பு அது.

இதைப் புரிந்து கொண்ட திலீப், ’’பயப்பட வேண்டாம். நாங்கள் ஆதரவாக இருப்போம். எல்லாரும் ஒன்றாக இந்தப் படத்தில் பணியாற்ற போகிறோம்’’ என்று தைரியம் சொன்னார். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.