எந்த ஹாலிவுட் படத்திற்கும் 2.ஓ படம் குறைவானதல்ல என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை ஆறு மணிக்கு 2.ஓ மேக்கிங் வீடியோ வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி வீடியோ இன்று வெளியானது. அதில் படக் காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதை பற்றி ரஜினி, ஷங்கர், நிரவ் ஷா, அக்க்ஷை குமார் உள்ளிட்ட கலைஞர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வீடியோவில் முதலில் பேசும் ஷங்கர். இந்தப் படத்தை கட்டாயம் 3டியில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் இந்தக் கதைக்கு அது தேவைப்பட்டது. நிறைய ஹாலிவுட் படங்களை முதலில் 2டியில்தான் தொடங்குவார்கள். அப்புறம் போஸ்ட் புரடெக்ஷனில் 3டிக்கு மாற்றம் செய்வார்கள். ஆனால் எங்கள் படத்தை லேட்டஸ்ட் 3டி கேமிராவில் நேரடியாக படமாக்கியுள்ளோம். ஒவ்வொரு காட்சியும் கம்ப்யூட்டர் திரையில் சரியாக வந்துள்ளதா என்று நான் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய விஷூவல் எஃபெக்ட்ஸ் செய்து அதிகப்படியான சண்டைக்காட்சிகள் உருவாக்கியுள்ளோம். நிச்சயம் உங்களால் ரசித்து இந்தப் படத்தை பார்க்க முடியும். ரசிகர்கள் ரஜினியை கண்ணுக்கு மிக அருகில் வைத்து காண முடியும் என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
"3டி எபெக்ட் சண்டைக்காட்சிகளுக்கு சரியான வடிவம் கொடுக்கும். அந்தக் காட்சிகளை இந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கவில்லை. 3டி எல்லாவற்றையும் மிக பெரியதாக காட்டக் கூடியது. 2டி வடிவத்தில் எடுத்தால் தட்டையான இமேஜைதான் காட்ட முடியும். ஆனால் 3டி என்றால் நமக்கு நிறைய இடம் கிடைக்கும். மேலும் புதிய விஷங்களை உள்ளே கொண்டு வரலாம்" என்கிறார் இந்தப் படத்தின் கேமிராமேன் நிரோவ்ஷா.
"ஷங்கர் கதையை எழுதும் போதே மனதில் 3டியில் எடுக்க வேண்டும் என்றே எழுதினார். அதான் மிக முக்கியம். முதல் 3டி காட்சியை நான் திரையில் பார்த்தேன். என்ன அற்புதமாக இருந்தது தெரியுமா? திரும்பத் திரும்ப பார்த்து கொண்டே இருந்தேன். எத்தனை தடவை நான் பார்த்திருப்பேன் என்றே கூற முடியாது. நான் ஷங்கரை பாராட்டினேன். ஏனென்றால் அவர் என்னை வசீகரித்துவிட்டார். ஐ யாம் வெயிட்டிங் டு சி ஆடியன்ஸ் ரியாக்ஷன். எந்த ஹாலிவுட் படத்திற்கும் இந்தப் படம் குறைவானதில்லை" என வீடியோவில் உற்சாகத்தில் எகிறி குதிக்கிறார் ரஜினிகாந்த்.