சினிமா

'சினிமாவை வடக்கு, தெற்கு என பிரித்துப் பேசாதீர்கள்' - சொல்கிறார் நடிகர் 'ராக்கி பாய்' யாஷ்

JustinDurai

சினிமாவை வடக்கு, தெற்கு என பிரித்துப் பேசக்கூடாது என்று கூறியுள்ளார் நடிகர் யாஷ்.

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறியவர் யாஷ். பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வரும் அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இதனால் யாஷின் அடுத்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் 'இந்தியா டுடே கான்க்ளேவ் மும்பை 2022' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் யாஷிடம், நீங்கள் பான்-இந்தியன் ஸ்டாராக மாறியுள்ள கன்னட நடிகரா? அல்லது கன்னட சினிமாவில் நடிக்கும் பான்-இந்தியன் ஸ்டாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த யாஷ், "நான் ஒரு கன்னடர், அதை மாற்ற முடியாது. ஆனால் நானும் ஒரு இந்தியன். நம் நாட்டில் நாம் இந்தியர்கள். எனவே, கலாச்சாரத்தில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். கர்நாடகாவில் பொதுவாக துளு கலாச்சாரம் உள்ளது. ஆனால், வட கர்நாடகத்தில் அது வேறாக இருக்கும். இதுபோன்றவையே நமது பலம். இது ஒருபோதும் நமது பலவீனமாக மாறிவிடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு தொழில். அதை வடக்கு, தெற்கு என பிரித்துப் பேசக்கூடாது. இதுபோன்ற பேச்சுக்களில் இருந்து மக்கள் கடந்து வந்துவிட்டனர். அவர்கள் யாரும் இப்போது பாலிவுட் ஸ்டார், மற்ற மொழிகளின் ஸ்டார் எனப் பார்ப்பதில்லை" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக முதல்நாளிலேயே தட்டித் தூக்கிய ‘லவ் டுடே’ படம் -வசூல் நிலவரம்