சினிமா

மகளிர் மட்டும் கதை ஆண் இயக்குனரிடமிருந்து வந்தது.... ஜோதிகா ஆச்சரியம்

webteam

மகளிர் மட்டும் கதை எப்படி ஒரு ஆண் இயக்குனரிடமிருந்து வந்தது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

அது பற்றி அவர் கூறுகையில், ‘மகளிர் மட்டும்' படத்தில் ரோட்- ட்ரிப் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் கதை. இந்தக் கதை எப்படி ஒரு ஆண் டைரக்டரிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா உடன் இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. முதல் நாள் படபிடிப்பை ஒரு படகில் வைத்து எடுத்தார்கள். அப்போது என்னால் சரியாக வசனத்தை பேசி நடிக்க முடியவில்லை. அப்போது இந்த மூன்று நடிகைகள்தான் என்னை கம்ஃபோர்ட் ஸோனுக்கு கொண்டு வந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். 

படத்தில் நான் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி கொடுத்தார். அதன் பிறகு ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவரோடு உத்தரபிரதேச மாநிலத்துக்கு சென்றேன். அவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ. நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன். நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்கு சென்று வருகிறேன். என்னோடு நடித்த சக நடிகர்களை விட நான் ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன் என்றார். 

பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் தான் இறுதிச்சுற்று என்ற ஒரு படம் வெளிவந்து, வெற்றியும் பெற்றது. இந்த நிலை மாற வேண்டும்‘ என்றார் ஜோதிகா.