சினிமா

கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் போன்ற படப்பிடிப்பு செட்!!

webteam

கிறிஸ்துவ தேவாலயம் போன்ற செட் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் காலடி பகுதியில் நடிகர் டோவினோ தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி திரைப்படத்திற்காக கிறிஸ்துவ தேவாலயம் போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் அந்த செட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் இன்னும் இருந்துள்ளன. இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் தேவாலயம் போன்ற செட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

காலடி பஞ்சாயத்திடம் முறையான அனுமதி பெறாமல் செட் அமைக்கப்பட்டதாகவும் அதனால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் பஜ்ரங் தள் அமைப்பினர் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இது குறித்து நியூஸ் மினிட் பத்திரிகை காலடி பஞ்சாயத்திடம் விசாரித்தபோது, பிப்ரவரிக்கு முன்னதாக இது குறித்து படக்குழு அனுமதி கேட்டதாகவும், அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த செட் உடைக்கப்பட்டது மிகப்பெரிய பண நஷ்டத்தையும், மனக்கஷ்டத்தையும் கொடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் படக்குழு புகார் தெரிவித்துள்ளனர். படத்திற்காக போடப்பட்ட செட் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தின் நாயகன் டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகினரும் கண்டத்தை பதிவு செய்துள்ளனர்