சினிமா

“நடிகை ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன?” - உயர்நீதிமன்றம் கேள்வி

“நடிகை ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன?” - உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

நடிகை ஹன்சிகா, இயக்குனர் ஜமீல் ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் ‘தேசமுதுரு’வில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக முதன்முதலில் அறிமுகமானார். இதையடுத்து இந்தி, கன்னடம் எனப் படங்கள் நடித்தார். 2011 ஆம் ஆண்டு மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ‘எங்கேயும் காதல்’,‘ஒரு கல் ஒருகண்ணாடி’,‘சிங்கம்2’,‘வேலாயுதம்’,‘மான்கராத்தே’, ‘அரண்மனை’, ‘போகன்’,‘குலேபகவாலி’ உள்ளிட்ட பல படங்கள் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றார். 

இதைத்தொடர்ந்து இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஹன்சிகா துறவி வேடமணிந்து சுருட்டு புகைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கினாலும் இந்து அமைப்பினரிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியது.

இதுகுறித்து இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், இந்து மதம், பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகா புகைப்பிடிப்பது போல் போஸ்டர் உள்ளது. எனவே ‘மஹா’ படம் தொடர்பாக நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகை ஹன்சிகா, இயக்குனர் ஜமீல் ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.