சினிமா

ஹேமமாலினி, பிரசூன் ஜோஷிக்கு இந்திய திரை ஆளுமை விருது : மத்திய அரசு அறிவிப்பு

sharpana

”2021-ம் ஆண்டிற்கான ’இந்திய திரை ஆளுமை விருது’ நடிகை ஹேம மாலினி மற்றும் பிரசூன் ஜோஷிக்கு வழங்கப்படும்” என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் அறிவித்துள்ளார்.

விருதுகளை அறிவித்தவுடன் பேசிய தாகூர், "2021-ம் ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாமாலினி மற்றும் பாடலாசிரியரும் மத்திய திரைப்பட சான்றளிப்பு குழுவின் தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகியோரின் பெயர்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய சினிமா துறையில் அவர்களின் பங்களிப்பு பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் இந்திய சினிமாவின் ஆளுமைகள் இவர்கள். கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்,” என்றார்.

தமிழ்நாட்டின் அம்மன்குடியில் அக்டோபர் 16, 1948 அன்று பிறந்த திருமதி ஹேமாமாலினி நடிகை, எழுதாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1963-ம் ஆண்டு தமிழ் திரைப்படமான ’இது சத்தியம்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

அதேபோல், பிரசூன் ஜோஷி கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துதல் நிபுணர் ஆவர். தனது முதல் உரைநடை மற்றும் கவிதை புத்தகத்தை 17-வது வயதில் அவர் வெளியிட்டார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.