சினிமா

வெளிநாட்டு காதலருடன் ரகசிய திருமணமா? நடிகை ரம்யாவின் தாய் விளக்கம்

webteam

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, துபாயில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அவரது தாய் ரஞ்சிதா மறுத்துள்ளார். 

தமிழில், குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ரம்யா. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரம்யா, பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவின் தலைவியாகச் செயல்பட்டு வந்த அவர், சமீபத்தில் இந்தப் பதவியில் இருந்து விலகினார்.

இவர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் துபாயில் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதை ரம்யாவின் அம்மா ரஞ்சிதா மறுத்துள்ளார்.

‘’ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ரம்யாவுக்கு இல்லை. திருமணம் நடக்கும்போது வெளிப் படையாக தெரிவிப்போம். ரபேலும் ரம்யாவும் பழகி வந்தனர். அவர் அவரது தொழிலில் பிசியாக இருக்கிறார். ரம்யா கட்சிப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். ரபேலுக்கு போர்ச்சுக்கலை விட்டு வர மனமில்லை. ரம்யாவுக்கு இந்தியாவை விட்டுச் செல்ல விருப்பமில்லை. இதனால் இருவரும் சுமூகமாகப் பிரிந்துவிட்டனர். அவர்கள் நட்பு மட்டும் இப்போது தொடர்கிறது’’ என்றார்.