சினிமா

மூன்று மொழிகளிலும் பிஸியான ஹன்சிகா!

webteam

சமீபகாலமாக போதிய படவாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்த நடிகை ஹன்சிகா, தற்போது மீண்டும் பிஸியாகியுள்ளார். 

தமிழில் பிரபுதேவாவுடன் குலேபாகாவலி, மலையாளத்தில் மோகன்லால் - விஷால் கூட்டணியில் உருவாகும் வில்லன் படம், தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக ஒரு படம் என ஹன்சிகாவின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்திரா படத்தின் டைட்டில் ரோலில் நடிக்கவும் ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறாராம் ஹன்சிகா. கேரளாவின் கிராமப் பகுதிகளில் வில்லன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது திடீரென ஹன்சிகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கே மருத்துவரை வரவழைத்த படக்குழுவினர் ஹன்சிகாவுக்கு மருத்துவம் பார்க்கச் செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்ற ஹன்சிகா, குறித்த நேரத்தில் காட்சிகளில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், அந்த ஷூட்டிங் முடிந்தவுடன் ஓய்வெடுக்காமல் கோபிசந்த் நடிக்கும் கௌதம் நந்தா படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்துவிட்டாராம். அங்கு பாடல்காட்சிகளை முடித்து விட்டு தற்போது குலேபாகாவலி படத்தின் படப்பிடிப்புக்காக ஹன்சிகா சென்னை திரும்பியுள்ளார். ஒரே நேரத்தில் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என மீண்டும் பிஸியாகி இருக்கிறார் ஹன்சிகா.