லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றியபின், தமிழ்நாடு வந்த இசைஞானி இளையராஜாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் லண்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து தமிழ்நாடு வந்த பிறகும் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜாவின் பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.