சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு: சோகத்தில் சினிமா காதலர்கள்

sharpana

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலால் தற்போது, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதுகுறித்து வைகோ எம்.பி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உரிய விதிகளை பின்பற்றி நவம்பரில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரியில் 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மத்திய செய்தி ஒளிபரப்புத்துறையும் கோவா மாநில அரசும் கலந்தாலோசித்தப்பிறகே எடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு நடந்த கோவா சர்வதேச திரைப்படவிழாவில் 76 நாடுகளும் 200 படங்களும் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முதல் உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்களூம், இயக்குநர்களும், நடிகர்களும் ஒவ்வொரு ஆண்டும் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அனைத்து படங்களையும் பார்ப்பார்கள்.

 விருதுகளும் கொடுக்கப்படும். இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், சினிமா காதலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த ஆண்டுதான் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருதை அமிதாப் பச்சன் வழங்கினார்.