சினிமா

சூர்யாவுடன் 11 வருடங்களுக்குப் பிறகு 3வது முறையாக கைக்கோர்க்கும் பிரபல இயக்குநர்?

சங்கீதா

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் சூர்யாவுடன் ‘கஜினி 2’ படத்திற்காக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தீனா’, ‘ரமணா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்து தமிழின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பின்னர் சூர்யாவுடன் கைக்கோர்த்து ‘கஜினி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா - அசின் காட்சிகள் இளைஞர்களை ஈர்த்தது. இந்தப் படம் கதை திருட்டில் மாட்டினாலும், இந்தியிலும் அமீர்கானை வைத்து அதேபெயரில் எடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ், வரலாற்று சயின்ஸ் பிக்ஷன் படமான ‘7 ஆம் அறிவு’ படத்தை இயக்கினார். 2011-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜயை வைத்து ‘துப்பாக்கி’, கத்தி’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், கடைசியாக ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கினார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் மீது தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சை வந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸுடன், சூர்யா கைக்கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும்நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.