சினிமா

சமந்தாவை தொடர்ந்து பழனி முருகன் கோயிலில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் சாமி தரிசனம்!

PT

சமந்தாவைத் தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் தனது மனைவி நடிகை மஞ்சிமா மோகனுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார்.

நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சென்ற நடிகை சமந்தா, அங்கு சாமி தரிசனம் செய்தார். தற்போது அரிய வகை தசை இழுப்பு நோய்க்கான சிகிச்சையிலுள்ள சமந்தா, தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் படிப்பாதை வழியாக மலைக் கோவிலுக்கு சென்று, வழிநெடுக 600 படிகளில் சூடம் ஏற்றி, ராஜ அலங்காரத்தில் இருந்த முருகனை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று பழனி முருகன் கோயிலுக்கு அண்மையில் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களான நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான மஞ்சிமா மோகன் ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். தம்பதியர், மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இதனால் விரைவாக சாமி தரிசனம் செய்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன், கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு விரைந்து அங்கிருந்து கிளம்பினர். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.