சினிமா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வட சென்னையில் போட்டியிட்ட கானா பாலா நிலை என்ன?

சங்கீதா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி அடைந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடசென்னை பகுதியில் கானா பாடல்கள் மூலம் கலக்கிக் கொண்டிருந்த பாலா, ‘கானா பாலா’என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார் . இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘பிறகு’ படத்தின் மூலம் திரையுலகில் கடந்த 2007-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்தோஷ் நாராயணன் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். ஹாரிஸ் ஜெயராஜ், ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் படங்களிலும் அவர் பாடி வந்தார்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார் 51 வயதான கானா பாலா என்கிற பாலமுருகன். கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் 3534 வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார்.

திமுக வேட்பாளரை விடவும் 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வந்தார். அவர் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். கடைசியில் 8303 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்ற நிலையில், 6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்பதால் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று கானா பாலா தெரிவித்தநிலையில், 2,208 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.