சினிமா

பாலா நடிக்க சொன்னது ஆச்சர்யம்: ஜி.வி.பிரகாஷ்

webteam

பாலாவின் 'நாச்சியார்' பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்துள்ள 'நாச்சியார்' திரைப்படம் இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் செயற்கையான கதை அமைப்பு என கூறியுள்ளனர். சிலர் ஆகச் சிறந்தத் திரைப்படம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் நான் நடித்து வெளியாகியுள்ள 'நாச்சியார்' படத்துக்கு நீங்கள் அளித்த அமோக ஆதரவிற்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி. 'நாச்சியார்' திரைப்படம் விமர்சகர்களிடமும், மக்களிடமும், திரையுலக பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது. 

எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. 'நாச்சியார்' படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத்தான் அழைக்கிறார் என்றுதான் நினைத்தேன். 'நீ தான் நடிக்கிற' என்று பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 'நாச்சியார்' படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே 'நல்ல நடிகன்' என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா சார் மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் என்னுடன் நடித்த ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கும் நன்றி. இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.” என தெரிவித்துள்ளார்.