சினிமா

விவசாயிகளின் நலனுக்காக 1 டிக்கெட்டிற்கு ரூ. 1 ஒதுக்கும் விஷால்!

webteam

துப்பறிவாளன் திரைப்படம் ரிலீசாகியுள்ள திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், தமிழக விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிவில் வெற்றி பெற்று பதவியேற்பு விழாவில் விஷால் பேசும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் வசூலிக்கப்பட்டு அந்தத் தொகை விவசாயிகள் குடும்ப நலனுக்காக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'துப்பறிவாளன்' இன்று ரிலீசாகி இருக்கிறது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் அவரே தயாரித்துள்ளார். இதனையடுத்து  'துப்பறிவாளன் ' படத்தின் திரையரங்க வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என விஷால் அறிவித்துள்ளார். 

விஷாலின் இந்த செயலுக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழகமெங்கும் 350-க்கும் அதிகமான திரையரங்குகளில் 'துப்பறிவாளன்' திரையிடப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தும்போது டெல்லி சென்ற விஷால் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.