சினிமா

வெளியாகிறது 'ஜெயில்" படத்தின் முதல் பாடல்... வசந்த பாலன் உருக்கம்...!

subramani

‘ஜெயில்’திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது. 

மரியதாசன் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் ‘ஜெயில்’. இத்திரைப்பத்தின் முதல் பாடலான “காத்தோடு காத்தானேன்” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்பாடலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ராதிகா சரத் குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், அபர்நதி, பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்தும் இருக்கிறார். அபர்நதி பிரபல தொலைக்காட்சியொன்றில் ஆர்யா தொகுத்து வழங்கிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர். தற்போது இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். 

பாடல் வெளியீடு குறித்து வசந்த பாலன் “எத்தனையோ நெருக்கடிகள், தடைகளைத் தாண்டி நேர்த்திக்கடன் போட்ட பக்தன் வாயில் அலகு குத்தி, முதுகில் சொருகப்பட்ட கொக்கிகளோடு குருதி ஒழுக இறைவன் சன்னதியை நோக்கி, தேரை இழுத்து வருவதைப்போல இன்று ‘ஜெயில்’ படத்தின் இசைத்தேரை ரசிகர்களின் சன்னதியில் கொணர்ந்து சேர்த்து விட்டோம்.” என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். 

இப்படத்தின் பாடல் உரிமையினை சோனி சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது. 2006’ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' திரைப்படத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.