லியோ
லியோ  முகநூல்
சினிமா

ட்ரெய்லர் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. லியோ சிறப்புக் காட்சி தொடர்பாக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

Angeshwar G

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மீண்டும் இணைந்து இப்படத்தை முடித்துள்ளனர்.

LEO

இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத் எனப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவான திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படம் தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

படத்திற்கான இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்தானது. என்றபோதும் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று மாலை ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் லியோ படத்தில் த்ரிஷா கதாப்பாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இருப்பினும் ட்ரெய்லர் எத்தனை மணிக்கு என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.

இதனால், விஜய் ரசிகர்கள் ட்ரெய்லர் எப்போ வரும் என சோஷியல் மீடியால் கொந்தளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போதுதான் ட்ரெய்லர் 6.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தகையா சூழலில் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் கசிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் சிறப்புக் காட்சி இருப்பதாலும், வெளி நாடுகளில் முன்னரே திரைப்படம் வெளியாவதாலும், தமிழ்நாட்டிலும் சிறப்புக் காட்சிகளை நடத்த லியோ தயாரிப்புக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.18ம் தேதி மாலை மற்றும் இரவுக் காட்சிகளை நடத்தலாமா என்கிற ரீதியில் ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டர்!

ட்ரெய்லர் திரையிடப்படுவதில் புதிய சிக்கல்

பெரிய திரைப்படங்களின் ட்ரெய்லர் வெளியானால் திரையரங்குகளில் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படும். சென்னை ரோஹினி தியேட்டரிலும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட முன்னேற்பாடுகள் நடத்தப்பட்டன. திரையரங்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் ஆணையரை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் ட்ரெய்லர் திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தின் வெளியிட்டுக்கு முதல் நாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் லாரியில் மேல் ஏறி உற்சாகமாக ஆடிய போது கீழே குதிக்கும்போது முதுகுதண்டு உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு அனுமதி வழங்க கோயம்பேடு காவல் நிலைய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரிகிறது.