சினிமா

விஜய்க்காக 6 கோடி செலவில் தயாராகும் ஃபுட்பால் அரங்கம்

webteam

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்காக பிரம்மாண்டமான ஃபுட்பால் அரங்கம் அமைக்க 6 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.

விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பிரத்யேக காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான ஃபுட்பால் அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்து வருகிறது. இதற்காக மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் வரும் ஃபுட்பால் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் இந்த செட்டில் தான் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. படத்துக்கு தேவையான காட்சிகள் அனைத்தையும் எங்கு வேண்டுமானாலும் கேமரா வைத்து காட்சிப்படுத்தி கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.