சினிமா

குரூப் போட்டோவுக்கு 5 ரூபாய் இல்லாமல் தவித்தேன்: மலரும் நினைவில் சிவகுமார்!

குரூப் போட்டோவுக்கு 5 ரூபாய் இல்லாமல் தவித்தேன்: மலரும் நினைவில் சிவகுமார்!

webteam

நடிகர் சிவகுமார், தனது அறக்கட்டளை மூலம் ப்ளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசளித்து கெளரவித்து வருகிறார். இதன் 39 ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000  (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) பரிசளிக்கப்பட்டது.

விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது கூறியதாவது:

நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் கிடையாது. அப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும். பவுனில் பாதி விலை வருகிறதே என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையில் விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். செருப்பு என்றால் என்னவென்று தெரியாது.  

தீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வரும். அப்போது புதுசா துணி போட மாட்டோம். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. எங்கம்மாவுடன் பிறந்தவர்தான் மாதம் 85 ரூபாய் அனுப்பி வைத்து சென்னையில் படிக்க வைத்தார். அப்போதுதான் 5 மணிக்கெல்லாம் யோகா செய்யத் தொடங்கினேன். 1 ரூபாய் கொடுத்து யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கித்தான், யோகாவே கற்றுக் கொண்டேன். அசைவ சாப்பாட்டை விட்டு 30 வருஷமாகிவிட்டது. இப்போது என் பிள்ளைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில்  சாப்பிடுகிறார்கள். ஒரு நேரம் சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாயாகிறது. 

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன்தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறை வோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.

இந்த மூஞ்சு எவ்வளவு கோரமானது என்று எனக்குத் தெரியும். 100 படங்களைத் தாண்டி நடிச்சுருக்கேன். அதைப் பார்த்த தமிழக மக்கள், கடவுள் இல்லயா? அந்த மக்களுக்கு நம்ம ஏதாவது பண்ணனும் இல்ல. ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும் போது, அது பலருக் குமே உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளைத் தொடங்கினேன்’ என்றார் சிவகுமார். 
நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.