சினிமா

‘என் கணவர் பீட்டரை அழைத்து விசாரிக்க வேண்டும்” - மனைவி போலீசில் புகார்

webteam

நடிகை வனிதாவை தனது கணவர் பீட்டர் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக கூறி அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எடிட்டர் பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா நேற்று திருமணம் செய்து கொண்டார். மிகக் குறைந்த அளவில் குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்தத் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடைப்பெற்றது. இந்தத் திருமணம் வனிதாவிற்கு மூன்றாவது திருமணமாகும். ஏற்கெனவே நடந்த இரண்டு திருமணங்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகியிருந்த நிலையில், அவர் பீட்டரை மணந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியாகின. மேலும், இந்தத் திருமணத்தில் வனிதாவின் மகள்களும் கலந்து கொண்டனர். தனது தாய் வனிதாவின் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய அவரது மூத்த மகள் ஜோவிகா இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், எடிட்டர் பீட்டரின் மனைவி எலிசபத் ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார். இப்போது பீட்டர் திடீர் என்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதாகவும் ஆகவே உடனே அழைத்து அவரை விசாரிக்கும்படியும் எலிசபத் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் புகாரினால் வனிதாவின் திருமணத்தில் புதிய பிரச்னை தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.