சினிமா

’ராணி பத்மாவதி’ யார் என அப்போது தெரியாது: தீபிகா படுகோன் பேட்டி

webteam

’சித்தூர் ராணி பத்மாவதி’ பற்றி எனக்கு முன்பே தெரியாது என்று நடிகை தீபிகா படுகோன் சொன்னார்.

நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பத்மாவத்’. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய இந்தப் படம் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் தீபிகா படுகோன் கூறும்போது, ‘இந்தப் படம் பற்றி இயக்குனர் பன்சாலி கூறும்போது, எனக்கு ராணி பத்மாவதி பற்றி தெரியாது. தெரிந்து வைத்திருக்க, நான் வரலாற்று மாணவியும் அல்ல. கதையை கேட்ட பிறகுதான் சில புத்தகங்களைத் தேடி படித்து அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். பிறகு அந்த கேரக்டராக மாறிவிட்டேன். அந்த கேரக்டரின் பாதிப்பில் இருந்து இன்னும் நான் வெளியேறவில்லை. அதில் இருந்து வெளியேற இன்னும் நாட்களாகும். இந்தப் படத்தில் நடித்ததற்கு எனக்கு அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

படத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் கிடைத்திருக்கும் வெற்றி பெரிய விஷயம். இந்தப் படத்தை என் பெற்றோருக்கு பெங்களூரில் பிரத்யேகமாக திரையிட்டோம். அவர்கள் என் நடிப்பை பார்த்து மெய்மறந்தார்கள். மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இருந்தாலும் சினிமாவில் எதுவும் நடக்கலாம். என்னை பாதிக்கும் வரலாற்றுக் கதைகள் வந்தால் அதில் நடிப்பது பற்றி யோசிப்பேன்’ என்றார்.