துல்கர் சல்மான் Pt web
சினிமா

”ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பயம் வரவேண்டும்; அப்போது தான் நடிப்பேன்” - துல்கர் சல்மான்

ஒரு படத்தின் கதையை கேட்கும்பொழுது அந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் வரவேண்டும். அப்படி வந்தால் தான் அந்த படத்தில் நடிப்பேன் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

Premkumar S

துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் `ஐ அம் கேம்'. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RDX படத்தின் வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச்சூழலில் தான், இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் 3-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையொட்டி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், ”தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஒரு திரைப்படத்தை பார்த்து பிடித்துவிட்டால் அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள். ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் அதிகமான தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இது நேரடியாக உருவாக்கப்பட்ட தமிழ் திரைப்படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்.

நாங்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய படம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தைப் போன்று இந்த படத்திலும் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும். கதிர் மிகச்சிறந்த நடிகர். நான் அவருடைய ரசிகன். இயக்குநர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அவர் எங்களுக்கு ஒரு குருவாக இருந்துள்ளார். மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் ஆண்டனி வர்கீஸ் எங்களுக்காக இந்த திரைப்படத்தில் வந்து நடித்துள்ளார். அவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

Im Game

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். நான் எந்த திரைப்படத்தில் நடித்தாலும், அது உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தின் கதையை கேட்கும்போது, அந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டால் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரும்.

‘காந்தா’ திரைப்படத்தில் நடிக்கும் போதும் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஏற்று நடிக்கப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அதேபோன்ற பயம்தான் இந்த திரைப்படத்திலும் இருந்தது. அதனால்தான் இந்த படத்தில் நடித்தேன்.எனக்கு ரசிகர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு நல்ல திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.