சினிமா

”என் கதையே வேற... முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” - ‘மாஸ்டர்’ விஜய்யின் வெறித்தனம்

webteam

மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தின் டீஸர் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டீஸர் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், டீஸரில் விஜய் பேசவில்லையே என்று சமூக வலைதளங்களில் உச்சிக்கொட்டினர்.

இதனையடுத்து ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன், விஜய் பேசும் வகையிலான ஒரு அப்டேட் வரும் என கூறியிருந்தனர்.

அதன்படி தற்போது படத்திலிருந்து ப்ரோமோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்சன் காட்சிகளுடன் நிறைந்திருக்கும் அந்தப் ப்ரோமோவில் விஜய் “இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்க எல்லாம் உயிர் பயத்துல ஓடிப்போயிருக்கலாம். என் கதையே வேற.. முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்” என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ரோமோவில் விஜய் பேசியிருக்கும் டயலாக், வெறித்தனமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.