சினிமா

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியானது: நீதிமன்றம்

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியானது: நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் குழு, ஒரு தலைபட்சமாக செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தலைப்பை தமிழில் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்றும் 2011ம் ஆண்டு ஜூலை மாதங்களில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுபோன்று தலைப்புகளுடன் சமர்ப்பிக்கப்படும் படங்களை ஆய்வு செய்ய 2012ஆம் ஆண்டு ஜனவரியில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்கள் நிறுவனம் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கோரி தற்போதைய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அந்த குழுவில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தது. அந்த மனுக்களை அந்த குழு நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேசமயம் படங்களின் தலைப்பை ஆராயும் குழுவின் அமைத்து அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனது திரைபடங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பாகுபாடு காட்டபட்டு வருவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், மனுதாரரின் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டபட்டுள்ளதாக தெரிவித்தார்.

வணிக வரி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றசாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குழுவில் ஆளும் கட்சிகளுக்கு வேண்டபட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இது போன்று பாகுபாடு காட்டுதல், ஒரு சார்பு நிலையெடுத்தல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் எனவும் தெரிவித்தார்.

இது போன்ற குழுக்களை அமைக்கும்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது போன்று நிபுணர் குழுவை நியமிக்கும் போது உரிய தகுதி அடிப்படையில் பெண்களும், ஆண்களும் தேர்வு செய்யபட வேண்டும் எனவும் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரபட்டு வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், திரைபடங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற நியமனங்களாக இருப்பதை உறுதி செய்ய குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்