சினிமா

மீண்டும் சுந்தர் சி உடன் இணையும் ஜீவா - ஜெய் கூட்டணி : 3 ஹீரோக்களுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

சங்கீதா

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும், புதிய நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஆர்யா நடிப்பில் உருவான ‘அரண்மனை 3’ படத்திற்குப் பிறகு, தனது வழக்கமான காதல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். இந்தப் புதியப் படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மாளவிகா சர்மா, ‘பிகில்’ புகழ் அம்ரிதா, பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். இந்தப் புதிய படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நேற்று பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இங்கு படப்பிடிப்புகள் முடிந்ததும், அடுத்ததாக உதகையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சுந்தர் சியின் இந்தப் புதிய படத்தை, குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சுந்தர் சி.யின் ‘கலகலப்பு 2’ படத்தில், ஏற்கனவே ஜெய் மற்றும் ஜீவா இணைந்து நடித்துள்ளனர். இதேபோல் நடிகர் விஜயின் ‘நண்பன்’ திரைப்படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். 2 அல்லது 3 கதாநாயகர்களை வைத்து கலகலப்பான படத்தை சுந்தர் சி கொடுத்து வருவதால், இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.