தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். 'ஈ', 'பேராண்மை' படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. நேற்று மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அவரது உடல்நிலைக் குறித்து புதிய தலைமுறை நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது,
”எஸ்.பி ஜனநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இறந்துவிட்டார் என்பது வதந்தி. ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால், அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய மூளை அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் தலைமையிலான குழுவினர் அவரது உறவினர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது” என்று கூறினர்.