சினிமா

இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு - முன்விரோதம் காரணமா என விசாரணை

webteam

தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்மாள் தெருவில் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணி தனது இன்னோவா காரை நிறுத்து வைத்துவிட்டு வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஆட்டோவில் வந்த மர்மநபர் கற்களை வீசி கார் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளார். இதனைப் பார்த்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உடனடியாக இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி இருப்பதால், அதில் முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.