சினிமா

’நீயே ஒளி’ - கவனம் ஈர்க்கும் சந்தோஷ் நாராயணின் 'சார்பட்டா பரம்பரை’ பாடல்

sharpana

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முதல் பாடல் ‘நீயே ஒளி’ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. ‘காலா’ வெற்றிக்குப்பிறகு, பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாய் அமைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ‘நீயே ஒளி’ பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. ’நீயே உனக்கு ஒளியாய் இரு’ என்ற புத்தரின் வார்த்தைகளையே பாடலின் முதல்வரியாக்கியுள்ளனர்.

ஆர்யா பாக்ஸிங்கில் சாதிக்க கடுமையாக உடற்பயிற்சிகளில் ஃபோக்கஸ் செய்யும் இப்பாடலை இண்டிபெண்டண்ட் பாடகர்கள் பாப் பாடலாய் பாடியிருப்பதோடு கலர்ஃபுல்லாய் நடனமும் ஆடுகிறார்கள். ‘எஞ்சாய் என்சாமி’ பாடல்போல் வித்தியாசமான கொரியோகிராஃபி அமைத்திருப்பதும் ’இனி குனிஞ்ச இடத்தில் நிமிர்ந்து சனத்த திரட்டு’ போன்ற வரிகளும் கவனம் ஈர்த்து திரும்பத் திரும்பப் பாடலைக் கேட்க வைக்கின்றன.

பொதுவாக பாப் பாடல்கள் என்றாலே மேற்கத்திய நாடுகளின் பாடல்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இனி சந்தோஷ் நாரயணனின் பாடல்களும் நினைவுக்கு வரும் வகையில் இப்பாடலை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஏற்கனவே, அவர் உருவாக்கிய ‘எஞ்சாய் என்சாமி’ பாடல் உலகம் முழுக்க வைரல் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.