சினிமா

“திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் இதைத்தான் முதலில் கூறுவேன்” - இயக்குநர் பா. ரஞ்சித்

சங்கீதா

தான் பார்த்து ரசித்த திரைப்படங்களை எடுக்க இந்த சமூகம் தன்னை அனுமதிக்கவில்லை என ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா.ரஞ்சித், திரைப்படங்களில் பல வகைகள் உள்ளன. அதில் தான் பார்த்து ரசித்த திரைப்படங்களை எடுக்க இந்த சமூகம் தன்னை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். மாறாக தனக்குள் இருக்கும் கேள்விகளை, பதில்களை கூற, திரைப்படங்கள் எடுக்க நிர்பந்திக்கப்பட்டவன் நான் எனக் கூறினார். அந்த பணியை ரசித்து செய்து வருவதாகவும், தன்னுடைய படங்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

‘குதிரைவால்’ போன்ற படங்களை பொது சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி உள்ளது. எனவே, இதுபோன்ற படங்கள் எடுக்கும்பொழுது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கும் என தெரிவித்தார். மேலும் திரைப்படங்களை எடுக்க விருப்பபட்டு வருபவர்களிடம், இங்கு இருக்கும் பிரச்சனைகளைதான் முதலில் கூறுவேன். அதற்குப் பிறகுதான் நிறைகளை சொல்லுவேன் என தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் ‘குதிரைவால்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் விக்னேஷ் தன்னுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்தார்கள் என ரஞ்சித் தெரிவித்தார். கலையரசன் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.